முகப்பு
தமிழ்நாடு

பெருகிவரும் ஆக்கிரமிப்புகள்: கண்டும் காணாத நெடுஞ்சாலைத் துறையினர்

திருத்தணி, நவ.  9: திருத்தணி நகரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து நெடுஞ்

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:09 PM
பகிர்:

திருத்தணி, நவ.  9: திருத்தணி நகரப் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இருப்பதால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத் துறையினரும், போலீஸôரும் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில்கள் நகரமாக திகழும் திருத்தணியில் நாளுக்குநாள் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒருங்கிணைந்த நீதிமன்றம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், 5 மேல்நிலைப் பள்ளிகள் என திருத்தணி பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்தாலும், நகரின் விரிவாக்கத்துக்கு தேவையான எந்தவிதமான திட்டப் பணிகளும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே பெரும்பான்மையானவர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

ஒவ்வொரு பெரிய நகரத்துக்கும் அடையாளமாக சிலவற்றை குறிப்பிடுவர். பெரும்பாலும் இந்த அடையாளங்கள் சாலைகளாகவே இருக்கும். திருத்தணி நகரப் பகுதியில் பெயர் சொல்லும் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

இந்தச் சாலைகளில் கல்லூரிகள், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நகரின் முக்கிய சாலைகளான அரக்கோணம் சாலை, திருப்பதி பைபாஸ் சாலை, சித்தூர் சாலை இவற்றில் தினசரி ஆயிரக்கணக்கான  பொதுமக்களும், இரு சக்கர மோட்டார் வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. திருத்தணியில் பல சாலைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில்தான் உள்ளன. இதேபோல் ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, பைபாஸ் சாலை ஆகியவற்றின் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லும் மேட்டுத்தெரு சாலையில் நிரந்தரமாக கடைகள் வைத்து வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மழைக் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, பொதுமக்கள் நடந்து செல்லும்போதும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது.

இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீஸôருக்கு தெரிந்தாலும் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது என்ன மர்மமோ தெரியவில்லை.

இனிவரும் நாட்களிலாவது பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், போலீஸôரும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

கண்துடைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில், அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, திருப்பதி பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் எல்லாம் அகற்றப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைகளை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். ஆனால் இந்த நாடகம் ஒரு சில நாள்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. எங்கெல்லாம் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றினார்களோ, அதே இடத்தில் அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் அதே கடைகள் முளைத்துவிட்டன.

இதேபோல் போலீஸôரும் தள்ளுவண்டி கடைக்காரர்களை விரட்டி அடிப்பதும் ஒரு சில நாள்களிலேயே அவர்கள் மீண்டும் அதே இடத்தில் கடைகளை விரிப்பதும் வாடிக்கையாகிவிட்ட ஒன்று.

ஆக மொத்தத்தில், நெடுஞ்சாலைத் துறையினர், போலீஸôர், ஆக்கிரமிப்பாளர்கள்- இவர்களுக்குள்ளான மறைமுக உறவு, "நாங்கள் அடிப்பதுபோல் அடிக்கிறோம்; நீங்கள் அழுவதுபோல் அழுங்கள்' என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.