ஈரோடு: கற்கும் பாரதம் திட்டம் தொடங்கப்பட்டதன் அடிப்படை நோக்கம் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற, இத்திட்டத்தில் மாற்றங்களை செய்வது மிகவும் அவசியமாகும்.
எழுத, படிக்கத் தெரியாதவர்கள், வறுமை, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் அறிவொளி கல்வித் திட்டம் மேம்படுத்தப்பட்டு கற்கும் பாரதம் என்ற பெயரில் சிறப்புக் கல்வித் திட்டத்தை மத்திய அரசு பல மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. கல்வியறிவில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள எழுத, படிக்கத் தெரியாதவர்களை இலக்காகக் கொண்டு இந்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு, எண் அறிவு, சமநிலை கல்வி, தொழிற்கல்வி ஆகிய பயிற்சிகள் இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்படும். இதற்காக தேர்வு செய்யப்படும் கிராமங்களில் ஊக்குனர்கள் எனப்படும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு அந்த ஊரில் உள்ள பள்ளிகளில் ஓய்வு நேரத்தில் பாடம் நடத்துவார்கள். இத்திட்டத்திற்கான செலவில் 25 சதவீதத்தை மாநில அரசும், எஞ்சிய 75 சதவீதத்தை மத்திய அரசும் ஏற்றுக்கொள்ளும்.
மகளிர் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகத்தில் மகளிர் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ள சேலம், பெரம்பலூர், ஈரோடு, தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
2001-ம் ஆண்டு புள்ளி விவரப்படி நாட்டில் ஆண்கள் கல்வி விகிதம் 75.25 ஆகவும், மகளிர் கல்வி விகிதம் 53.64 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் ஆண்கள் கல்வி விகிதம் 82.42 ஆகவும், மகளிர் கல்வி விகிதம் 64.43 ஆகவும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 75.32 சத ஆண்களும், 49.66 சத பெண்களும் கல்வி கற்றவர்களாக உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 7.77 லட்சம் பேர் கல்வியறிவு இல்லாதவர்கள் எனவும், இதில் ஆண்கள் 1.11 லட்சம் பேர் எனவும், மகளிர் 6.66 லட்சம் பேர் எனவும் தெரிய வந்துள்ளது.
சில சந்தேகங்களுக்கு விடைதேடப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுமானால், இத்திட்டம் நிச்சயம் சிறப்பான வெற்றியை அடையும். ஒவ்வொரு ஊராட்சியிலும் இரண்டு பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 முதல் 15 கிராமங்கள் உள்ள ஊராட்சிகளில் 2 பயிற்றுநர்கள் மட்டும் எவ்வாறு கல்வி அளிக்க முடியும்? பயிற்றுநர்களுக்கு மாதம் 2000 மட்டும் ஊதியம் வழங்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது. மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்களின் பணித்திறன் குறித்து அரசு அறியாததா?
தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்கள் அனைத்திலும் மலை கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் மொத்த நிலப் பரப்பில் 28 சத அளவுக்கு மலைப் பகுதிகள் உள்ளன. இங்கு பெண் கல்வி விகிதம் 5 சதத்திற்கும்
குறைவாகவே உள்ளது. மலை கிராமங்களில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவே பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. இக் கிராமங்களில் ஊராட்சிக்கு இரண்டு இடத்தில் மையங்களை ஏற்படுத்திவிட்டு, பெண்களை எப்படி பள்ளிக்கு அழைத்துச் செல்ல முடியும்?
மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவ, மாணவியரை இத்திட்டத்தில் பயிற்றுனர்களாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மலை கிராமங்களில் சென்று சேவை செய்ய எத்தனை மாணவர்கள் முன்வருவார்கள்? இதற்கு பெற்றோர்கள் எத்தனைபேர் அனுமதி அளிப்பார்கள் போன்ற சந்தேகங்களுக்கு விடைதேடிய பிறகு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பெரியார் கண்ட கனவான பெண் கல்வி, தமிழகத்தில் நிச்சயம் மேம்படும். பெரியார் வழியைப் பின்பற்றுவதாகக் கூறும்
ஆட்சியாளர்கள், பெரியாரின் கனவான பெண் கல்விக்கென தொடங்கப்பட்டுள்ள இத் திட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது கடமைதானே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.