முகப்பு
தமிழ்நாடு

கரும்புக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்படுமா?

அரியலூர்: கரும்பு சாகுபடியில் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், அதற்கான கொள்முதல் விலையைக் கூடுதலாக நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ந

Updated On : 20 செப்டம்பர், 2012 at 3:39 AM
பகிர்:
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:55 AM

அரியலூர்: கரும்பு சாகுபடியில் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், அதற்கான கொள்முதல் விலையைக் கூடுதலாக நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் நெல் பயிருக்கு அடுத்ததாக விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்வது கரும்புதான். விவசாய நிலங்கள் எல்லாம் தற்போது மனைகளாக மாறி வரும் நிலையில், விவசாயமும் குறைந்து வருகிறது.

விவசாயம் நல்ல நிலையில் இருந்தபோது, நெல்லுக்கு நிகராகக் கரும்பையும் விவசாயிகள் சாகுபடி செய்து லாபம் பெற்று வந்தனர். ஆனால், இன்றைய நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு போதிய லாபம் இல்லை. காரணம் செலவைக் காட்டிலும், வருவாய் குறைந்து வருவதுதான்.

Advertisement

ஓர் ஏக்கரில் 40 டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ.1.10 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், விவசாயிகளுக்கு கிடைப்பது ரூ.80,000 வரைதான். இதனால், விவசாயிகளுக்கு ரூ.30,000 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ. 1925 மட்டுமே அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. ஏக்கரில் 40 டன்னுக்கு இந்தத் தொகையைக் கணக்கிட்டால், ரூ. 77,000 வரைதான் கிடைக்கும்.

சில தொழில்சாலைகள் டன்னுக்கு 1950 தந்தாலும்கூட, ரூ. 3000 வரையே விவசாயிகளுக்குக் கூடுதலாகக் கிடைக்கும்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைத்தால்தான், பலன் கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம். மணி கூறியதாவது:

விலைவாசி உயர உயர அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு மட்டும் விலை நிர்ணயம் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

அரசு சர்க்கரை ஆலைகளின் நிலைமை எப்படி என்று தெரியவில்லை. ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பை விவசாயிகளிடமிருந்து பெற்று, நல்ல லாபம் சம்பாதிக்கின்றன. சர்க்கரை, மின்சாரம், எத்தனால், எரிசாராயம் என இவற்றின் மூலம் ஒரு டன் கரும்பிலிருந்து குறைந்தது ரூ.15,000 வரை லாபம் சம்பாதிக்கின்றன.

ஆனால், கரும்பு விவசாயிகள் ஓராண்டு காலம் உழைத்தாலும் நஷ்டம்தான் மிஞ்சுகிறது. அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 12,000 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு வரவைக் காட்டிலும், செலவுதான் அதிகம்.

முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியில் கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.2500 தருவதாகக் கூறினார்.

இப்போதைய நிலையில், ரூ.2500 கொடுத்தாலும் விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைக்காது.

எனவே, கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, டன்னுக்கு ரூ. 3000 விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.