சென்னை, டிச. 24: வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் பொன்னுசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரின் செயல்பாடுகள் குறித்தும், முறைகேடுகள் பற்றியும் விரைவில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.
சசிகலாவுக்கு தான் மிகவும் நெருக்கமானவர் என்று கூறி துறையின் அமைச்சர் மற்றும் செயலாளர் போன்று பொன்னுசாமி செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. துறையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் புள்ளிகள், அதிகாரிகள், ஊழியர்களின் பணியிட மாற்றங்கள் என அனைத்திலும் அவர் தலையீடு இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் கூறப்
பட்டன.
ஒரே நாளில் 250 கோப்புகள்: முதல்வரின் போயஸ் தோட்ட இல்லத்தில் மாற்றம் நிகழ்ந்ததற்கு மறுநாள், தனக்கும் பாதிப்பு வரக்கூடும் என்பதை அறிந்த பொன்னுசாமி வேளாண்மைத் துறை தொடர்பான 250 கோப்புகளில் ஒரே நாளில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் புதுக்கோட்டையில் உள்ள குடிமியான்மலையில் வேளாண்மை பயிற்சிப் பிரிவின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், சில நாள்களாக அவர் சென்னையிலேயே இருந்தார்.
அவர் மீதான புகார்கள் உறுதிப்படுத்தப்படவே, வெள்ளிக்கிழமை இரவு அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
வேளாண்மைத் துறையில் இருந்து மே மாதத்துடன் அவர் ஓய்வு பெற இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது ஓய்வுப் பெறுவதில் பிரச்னையை ஏற்படுத்தும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்
கின்றன.
அடுத்தடுத்து அதிரடி: அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சசிகலாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் என சொல்லிக் கொள்பவர்களில் முதலாவதாக ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறையின் சிறப்புப் பணி முன்னாள் அதிகாரியுமான பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து, முதல்வரின் பாதுகாவலராக இருந்து திருமலைச்சாமி அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் பொன்னுசாமியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அரசுத் துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.