அரசின் இலவச திட்டங்களால் திணறும் வருவாய்த்துறை அலுவலர்கள்
சென்னை, ஜன. 23: அரசின் பல்வேறு இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் பணிச் சுமை காரணமாக வருவாய்த்துறை அலுவலர்கள் திணறும் நிலையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலகங்களில்
சென்னை, ஜன. 23: அரசின் பல்வேறு இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் கூடுதல் பணிச் சுமை காரணமாக வருவாய்த்துறை அலுவலர்கள் திணறும் நிலையில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலகங்களில் வட்டாட்சியர்கள் (தாசில்தார்கள்) முதல் அலுவலக உதவியாளர்கள் வரை இப்போது 11 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். சுமார் 5 ஆயிரம் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், வருவாய்த்துறை சார்ந்த பல்வேறு சான்றிதழ்களை வழங்குதல், முதியோர் உதவித் தொகைகள் உள்பட நலிவுற்றோருக்கு பல்வேறு நல உதவிகள் வழங்குதல், அரசுக்கு வருவாய் இனங்களான வரி, கட்டணம், தீர்வைகளை வசூலித்தல் உள்ளிட்ட அன்றாடப் பணிகளை நிறைவேற்றுவதே இவர்களுக்கு சவாலாக உள்ளது.
இந்த நிலையில், இலவச வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட 11 நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் வருவாய்த் துறையினர் முக்கிய, பங்கு வகிக்கின்றனர்.
5 ஆயிரம் காலிப் பணியிடங்கள்: ஆனால், புதிது புதிதாக பல்வேறு நலத் திட்டங்களை அறிவிக்கும் அரசு, அதற்கான பணிச் சுமையைக் கருதியாவது பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள 5,000 காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு மெüனம் காத்து வருவது வருவாய்த்துறை அலுவலர்களின் மனக் குமுறலாக உள்ளது.
இலவச வேஷ்டி-சேலை திட்டத்தால் கடனாளியாகும் நிலை: தமிழகம் முழுவதும் இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 1.36 கோடி பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பெறப்படும் இலவச வேஷ்டி-சேலைகளை அந்தந்த தாலுகாக்கள் முதல் கிராமங்கள் வரை விநியோகிக்கும் பொறுப்பு இப்போது வட்டாட்சியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலவச வேஷ்டி சேலைகளை கட்டுக் கட்டாக எடுத்துச் செல்ல வாகனக் கட்டனம், சுமை தூக்குவோருக்கான கூலித் தொகை உள்ளிட்ட செலவுகளை வட்டாட்சியர்களே முன்தொகையாக வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், இவர்கள் கடன்சுமைக்கும் ஆளாக வேண்டியுள்ளது. இதற்கிடையே தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 முதல் வேலைநிறுத்தம்: பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்தபோதும், 7-வது ஊதியக் குழுவுக்கு 87 துறைகளை அரசு பரிசீலனைக்கு எடுத்தது. ஆனால், வருவாய்த்துறையை மட்டும் அரசு புறக்கணித்துள்ளதாக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தகுதி ஊதியம் (கிரேடு பே), 30 சதவீத தனி ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.