முகப்பு
தமிழ்நாடு

அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஒசூர் ஐ.டி. பார்க் திட்டம்!

ஒசூர்: திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் உள்ள ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்) திட்டத்துக்கு அதிமுக அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து

Updated On : 20 செப்டம்பர், 2012 at 7:49 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 11:40 PM

ஒசூர்: திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் உள்ள ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்) திட்டத்துக்கு அதிமுக அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதால் அவர்கள் ஆர்வமாக உள்ளனர். ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு 2007 பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இதற்காக 174 ஏக்கர் அரசு நிலம் தயாராக இருந்தும் இந்தத் திட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒசூர் பூங்காவில் இடம் கேட்டு 17 நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் அவ்வாறு பதிவு செய்து 4 ஆண்டுகளாகக் காத்திருக்கின்றன.

Advertisement

இத் திட்டத்துக்காக சுமார் 14,000 சதுர அடியில் எல்காட் அலுவலகம் அமைக்கவும், சாலை, மின்சாரம், தொலைபேசி,அகண்ட அலைவரிசை உள்ளிட்ட வசதிகளுக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இங்கு ஒரு ஏக்கர் நிலம் ரூ.67 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், தொழிற்சாலைகளை அமைக்க நில ஒதுக்கீடு பெற்ற ஒரு சில நிறுவனங்களும் எந்த வசதியும் இல்லாததால் ஆரம்ப கட்டப் பணிகளைக் கூடத் தொடங்க முடியாமல் உள்ளன.

சர்வதேச முன்னணி நிறுவனங்களும் ஒசூர் ஐ.டி. பூங்காவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டின. ஆனால், அந்நிறுவனத்தினர் ஓசூரில் தங்கள் தொழிலை தொடங்கி விட்டால் மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலைத் தொடங்க முன் வரமாட்டார்கள் என்று கருதித்தான் ஒசூர் ஐடி பார்க் திட்டத்துக்கு அப்போதைய அரசு கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

நில ஓதுக்கீடு பெற்ற பல நிறுவனங்கள் போதிய அனுபவமில்லாதவை என்றும் அதனால்தான் அவை தொழிற்சாலைகளைத் தொடங்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எது, எப்படியோ,தகவல் தொழில்நுட்பப் பூங்காத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.