செங்கல்பட்டு, மே 6: மாமல்லபுரத்தில் கோடை சுற்றுலா சீசன் தொடங்கியது. மாமல்லபுரத்துக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 2011-ல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இங்குள்ள அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோயில், ஆயர்பாடி சிற்பங்கள், வெண்ணெய்த் தாழி போன்றவை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன.
தமிழகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், 2011 மார்ச் மாதத்தில் சீசன் தொடங்கியதில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 லட்சம் எனவும் கடந்த ஆண்டு இது 75 லட்சம் ஆக இருந்தது எனவும் தமிழக சுற்றுலாத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மழைக்காலம், குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடக்கத்தில் இங்கு சுற்றுலா சீசன் மார்ச் மாதம் 2-ம் வாரத்தில் தொடங்கியதை அடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
மாமல்லபுரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 2.4 லட்சம்.
ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தமிழக தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதங்கள் மற்றும் மாமல்லபுரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது புலிக்குகை.
இது ஒருபக்கம் இருக்க, பளிங்கு கல் சிற்பங்கள், சங்குப் பொருள்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் இளைப்பாறவோ, உணவு உண்ணவோ வசதியான இடங்கள் இல்லை.
போதுமான குடிநீர் வசதியோ, கழிப்பறை வசதிகளோ ஏதுமில்லை என சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர்.
இதுமட்டும் அல்லாமல் மாமல்லபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் திண்பண்டங்கள், தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருள்கள் எம்.ஆர்.பி. விலையை விட கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன.
பல இடங்களில் சுகாதாரமற்ற குடிநீர் அடைக்கப்பட்ட பாட்டில்கள், போலி குளிர்பான பாட்டில்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர்.
மாமல்லபுரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையமும் உள்ளது. பேரூராட்சி அலுவலகம், சுற்றுலாத் துறை அலுவலகம், தொல்பொருள் ஆராய்ச்சித் துறை அலுவலகம் (ஆர்ட் காலேஜ் டிபார்ட்மெண்ட்) உள்ளது.
சுற்றுலாத் துறை பற்றி பயணிகளின் கருத்துகளைக் கேட்டு பதில் அளிக்க போதுமானஅலுவலர்கள் இல்லை என மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.