ஆராய்ச்சிக் கூடமாக மாறும் மாநகராட்சிப் பள்ளி: 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் அவலம்
சென்னை: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக இயங்காத மாநகராட்சி பள்ளியை ஆராய்ச்சிக் கூடமாக மாற்ற மாநகராட்சி முயற்சித்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை 111-வது வார்ட்டில் உள்ள தொடக்கப் பள்ளி 2009
சென்னை: சென்னையில் கடந்த 2 ஆண்டுகளாக இயங்காத மாநகராட்சி பள்ளியை ஆராய்ச்சிக் கூடமாக மாற்ற மாநகராட்சி முயற்சித்து வருகிறது.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை 111-வது வார்ட்டில் உள்ள தொடக்கப் பள்ளி 2009-ம் ஆண்டு முதல் இயங்கவில்லை. சமீபத்தில், இந்தப் பள்ளி மேலோட்டமாக சீரமைக்கப்பட்டது. இதனால் இந்தப் பள்ளி இயங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், இந்த பள்ளி வளாத்தில் மாணவர்களுக்கான ஆராய்ச்சிக் கூடமும், பிரத்யேக கணிணி பயிற்சி மையமும் அமையவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை "எய்ட் இந்தியா' எனும் தனியார் தொண்டு நிறுவனமும், அரிமா சங்கமும் இணைந்து இந்த ஆராய்ச்சி கூடத்துக்கான செலவை ஏற்றிருப்பதாகவும்
கூறப்படுகிறது. ஆராய்ச்சி கூடங்கள் அமைவதற்கான கணிணிகள் மற்றும் இதர உபகரணங்கள் பள்ளியில் வைக்கப்பட்டுவிட்டதாகவும் பள்ளியின் காவலாளி தெரிவித்தார்.
Advertisement
மேலும், இரண்டு ஆண்டுகளாக இந்த மாநகராட்சிப் பள்ளி மூடப்பட்டுள்ளதால் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் கடந்த மாதம் நள்ளிரவில் பெய்த மழையால் விழுந்தது. இதனால் பள்ளியின் ஒரு பகுதி சுற்றுச் சுவர் இடிந்து தரைமட்டமானது.
பீட்டர்ஸ் சாலையின் போக்குவரத்துக்கு விழுந்த மரம் தடையாக இருந்ததால் அதை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தியது. ஆனால், பள்ளியின் சுற்றுச் சுவர் இன்னமும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்தப் பள்ளி போதிய பாதுகாப்பின்றி உள்ளது. மேலும், இந்தப் பள்ளியின் தணணீர் தொட்டியும் கன மழையின் காரணமாக முற்றிலுமாக பெயர்ந்துள்ளது. இதனையும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலத்தின் அலுவலர் சம்பத் கூறியது: இந்தப் பள்ளியில் போதிய அளவிலான மாணவர்களின் சேர்க்கை இல்லாததால் தான் இதனை ஆராய்ச்சிக் கூடமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது என்றார். சுற்றுச் சுவரை மீண்டும் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், இடிபாடுகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
இது குறித்து சென்னை மாநகராட்சியின் உயர் அதிகாரி கூறியது: மாநகராட்சியின்
பள்ளியில் உள்ள சில குறைபாடுகள் களையப்பட்டு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் விரைவில் இப்பள்ளி செயல்படும். ஆனால், எப்போது எந்த மாதத்திலிருந்து இவை அதிகாரபூர்வமாக செயல்படும் என உறுதியாகக் கூறமுடியாது. இந்தப் பணிகள் இப்போது தான் முதல் கட்டத்தை எட்டியுள்ளன என்றார் அவர்.