முகப்பு
தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டு அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.  இந்தத் திருட்டில் ஈடுபடுபவர்கள் குறைந்தவிலை செல்போன்களை திருடுவதில்லை. இவர்க

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:38 PM
பகிர்:

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

 இந்தத் திருட்டில் ஈடுபடுபவர்கள் குறைந்தவிலை செல்போன்களை திருடுவதில்லை. இவர்கள் குறிவைப்பது ரூ.8,000 முதல் ரூ.40,000 வரை மதிப்பிலான செல்போன்களை மட்டுமே. தனித்தனி குழுக்களாக ரயில் நிலையங்களுக்குச் செல்லும் இவர்கள், பயணிகளின் கவனத்தை திசைதிருப்பி செல்போன்களை திருடிச் செல்கின்றனர்.

 குறிப்பாக டிக்கெட் கவுன்ட்டர்கள், கேன்டீன்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் கூட்டநெரிசலில் ரயில் ஏறும் பயணிகளிடம் இருந்து செல்போன்கள் மிக எளிதாக திருடப்படுகின்றன. வடமாநிலத் திருடர்கள்: "செல்போன் திருட்டுகளில் பெரும்பாலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஈடுபடுகின்றனர். இவர்கள் 6 அல்லது 8 பேர் குழுவாக சென்னைக்கு வருகின்றனர். இங்கு ரயில் நிலையம் அருகே உள்ள ஏதாவது ஒரு விடுதியில் தங்குகின்றனர். பகல், இரவு நேரங்களில் சென்ட்ரல், எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களுக்கு குழுவாகச் சென்று செல்போன் திருட்டில் ஈடுபடுகின்றனர். திருடிய செல்போன்களை தங்களது சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்று விடுகின்றனர். இதன் மூலம் இவர்கள் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர்' என்று ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செல்போன் திருடர்களை ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸôரும் அவ்வப்போது கையும் களவுமாக பிடித்து கைது செய்து வருகின்றனர். ஆனாலும், ரயில் நிலையங்களில் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் தொடர் கதையாகவே உள்ளது.

 மின்சார ரயில்கள் சீராக இயங்குவதற்காக அமைக்கப்படும் செப்பு கம்பிகளையும் இந்தத் திருடர்கள் விட்டுவைப்பதில்லை. சிக்னல் இயக்கப்படுவதற்கு இந்தக் கம்பிகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. செப்பு கம்பி திருட்டால் அடிக்கடி சிக்னல் கோளாறுகள் ஏற்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆர். சேகர் கூறியது: "ரயிலில் பயணம் செய்யும்போது ஏற்படும் பிரச்னை மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் செய்ய புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ரயிலில் செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அந்தந்த எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ரயில்வே போலீசாரிடம் புகார் செய்வது வழக்கம். இதனால் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்யும் நிலை இருந்தது. இதுபோன்ற சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், திருட்டு உள்ளிட்ட புகார்களை ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸôரிடம் தெரிவிக்கலாம்.

 புகாரைப் பெற்றுக் கொள்ளும் போலீஸார், அதற்கான ரசீதை வழங்குவார். ரயிலில் இருக்கும் பாதுகாப்பு போலீஸôரை தொடர்பு கொள்ள முடியாத பயணிகள், 99625 00500 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் அல்லது எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். இந்தப் புகார்கள் சம்பந்தப்பட்ட ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்படும். பின்னர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாய்ப்பை பயணிகள் சரிவர பயன்படுத்தினால், ரயிலில் நடக்கும் குற்றச் சம்பவங்கள் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது' என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments