டீசல் விலை உயர்வால் வாகனக் கட்டணம் அதிகரிப்பு
டீசல் விலை உயர்வால், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லோடு ஆட்டோ முதல் லாரி வரை
டீசல் விலை உயர்வால், திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லோடு ஆட்டோ முதல் லாரி வரை, வாகனங்களுக்கான வாடகைக் கட்டணம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் எண்ணைய் நிறுவனங்கள், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 5 வீதம் உயர்த்தின. இதன் காரணமாக, லோடு ஆட்டோ வாடகை உள்ளூர் சவாரிக்கு, ரூ. 300-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கார், சுமோ கார்களுக்கான வாடகை, ஒரு கி.மீ.க்கு ரூ. 9 -லிருந்து 13 ரூபாயாகவும், வேன்களுக்கு ரூ.12-லிருந்து ரூ.15-ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த உயர்வுக்கு பிறகும், வாடகை கட்டுபடியாகாததால் கார் மற்றும் வேன் டிரைவர்கள், கி.மீ. வாடகையை தவிர்த்து, நாள் வாடகையை முன்னிறுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர்.
டிரான்ஸ்போர்ட் லாரிகளுக்கான மொத்த வாடகைக்கு 15 சதவீதம், சில்லரை வாடகைக்கு 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, திருத்தணியில் இருந்து சென்னை செல்ல, சுமோ வாடகையாக ரூ. 1,800 ஆக இருந்தது. இது தற்போது ரூ. 2,500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வு, டீசல் விலை உயர்த்தப்பட்ட சில தினங்களிலேயே அமலுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மளிகை சாமன்கள், காய்கறிகளின் விலையும், 20 சதவீதம் உயர்ந்தப்படவுள்ளது. வாடகை நிலவரம் இறுதியாகும் போது, மேலும் 10 சதவீதம் உயர்த்தப்படலாம் என வணிகர்கள் தெரிவித்தனர். விவசாயப் பகுதியான திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களில் போதிய மழை இல்லாதததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த விலை உயர்வு விவசாயிகளின் தலையில் பெரும் சுமையாக இறங்கியுள்ளது.