முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள்: மேதினப் பூங்காவில் நவம்பர் 2-ல் தொடக்கம்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான டனல் போரிங் இயந்திரத்தின் பாகங்களை இணைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த ராட்சத இயந்திரத்தின் தனித் தனிப் பாகங்கள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரம் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணியை நவம்பர் 2ஆம் தேதி முதல் மேற்கொள்ளும்.

Advertisement

அதேபோல, சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் 11 இடங்களில் நடைபெற உள்ளது. இதற்காக 11 டனல் போரிங் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் 9 இயந்திரங்கள் சீனாவில் இருந்தும், 2 இயந்திரங்கள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த டனல் போரிங் இயந்திரம் சுரங்கம் தோண்டிக்கொண்டே, 6 மீட்டர் விட்டத்தில் வட்ட வடிவிலான சிமென்ட் வார்ப்புகளை பதித்துக்கொண்டே வருகிறது. இவற்றின் அகலம் 1.2 மீட்டர்.

டனல் போரிங் இயந்திரம் 84 மீட்டர் நீளமுடையது. இந்த இயந்திரம் ஆண்டின் 365 நாளும் 24 மணி நேரமும் சுரங்கம் தோண்டும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 20 மீட்டர் வரை சுரங்கம் தோண்டும். பாறைகள் அதிகமிருக்கும் பகுதிகளில் ஒரு நாளைக்கு 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை சுரங்கம் தோண்ட முடியும்.

இந்த இயந்திரத்தில் 2 பணியாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருவார்கள். அவர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையும் இயந்திரத்தில் இருக்கும். இயந்திரத்தின் முன்பகுதியில் சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் பிளேடுகளை மாற்றுவது இந்தப் பணியாளர்களின் முக்கியப் பணியாகும்.

இந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், சீனாவில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். கடும் மழை பெய்தால்கூட இயந்திரத்தின் பணியில் பாதிப்பு ஏற்படாது.

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் ரூ. 14,600 கோடியில் அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2 ஆவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.

முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையும், 2 ஆவது வழித்தடமான சென்ட்ரலில் இருந்து திருமங்கலம் வரையும் சுரங்க வழிப்பாதையில், அதாவது பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டருக்கு கீழ் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

மொத்தமுள்ள 45 கிலோ மீட்டர் தொலைவு ரயில் பாதையில் 24 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். பூமிக்கு அடியில் 6.6 மீட்டர் விட்ட அளவுள்ள சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments