அரியலூர் மாவட்டம், கங்கை கொண்டசோழபுரம் பகுதி குறித்தும் அதனைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புகள் பற்றியும் பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் உலக பாரம்பரிய விழா கொண்டாடப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நமது பாரம்பரியத்தை இளைய தலைமுறையினரும் அறிந்து, அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 ஆம் தேதி வரை உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் யுனெஸ்கொ இதுவரை 30 தலைப்புகளில் பாரம்பரியச் சின்னங்களை அறிவித்துள்ளது. இவற்றில் 5 தமிழ்நாட்டில் உள்ளன. தஞ்சை பெரியகோயில் எனப்படும் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதீóஸ்வரர் கோயில், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், உதகை நீராவி ரயில் என்ஜின், மாமல்லபுரம் சிற்பங்கள் ஆகியவை யுனெஸ்கொவால் அங்கீகரிக்கப்பட்டவை.
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர சோழன் கங்கை வரை படை எடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் என்ற தலைநகரை அமைத்து அந்நகரின் நடுவில் பிரகதீஸ்வரர் கோயிலை கட்டினார். இக்கோயிலை யுனெஸ்கொ, கடந்த 2004 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
இந்தக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை பராமரிப்புப் பணிகளை செய்து வருகிறது. இந்தக் கோயில் கடந்த 2009-இல் உலகப் பாரம்பரிய விழா கொண்டாடப்பட்டது. அதன் பிறகு கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழா கொண்டாடப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உலகப் பராம்பரிய விழா கொண்டாடப்பட்டால் கங்கை கொண்டசோழபுரம் பகுதியும் அதனைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சிறப்புகள் பற்றியும் பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
எனவே, இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை உடனடியாக விழா நடத்த முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.