மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் தொடங்க இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பொதுமேலாளர் மருதப்பன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பொதுமேலாளர் மருதப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இளைஞர்களை சுயதொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் அரசு பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் இளைஞர்கள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம். இதில், பொதுப்பிரிவு ஆண்களுக்கு 21-வயது முதல் 35 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 21 வயது முதல் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதில் பட்டம், பட்டயம் பெற்று, விரும்பும் தொழிலில் பயிற்சி பெற்ற முனைவோராகவும் இருக்க வேண்டும். தொழில் தொடங்க விண்ணப்பிப்போர், கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் குடியிருந்து வருபவராகவும் இருக்க வேண்டும்.
Advertisement
நிறுவனம், உரிமையாளர் மற்றும் பங்குதாரர் நிறுவனமாகவும் இருக்கலாம். ஏற்கனவவே அரசு திட்டத்தில் மானியக் கடன் பெற்றிருந்தால், இதில் பயன்பெற முடியாது. அதனால், தகுதியானோர் திட்ட மதிப்பீடு விவரத்துடன் மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். இதில், அனைத்து உற்பத்தி தொழில்கள் தொடங்குவதற்கு குறைந்தது ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் தமிழக முதலீட்டுக் கழகம், அனைத்து தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக 25 சதவீதம் வரையில் மானியமும் அளிக்கப்படுகிறது. அதேபோல், குறிப்பிட்ட தவணைகளில் செலுத்தி முடித்தால் பின்முனை வட்டி மானியமாக 3 சதவீதமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் கட்டாயம் ஒரு மாதம் வரையில் தேர்வு செய்துள்ள தொழிலில் பயிற்சி பெற வேண்டும்.
எனவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் தொழில் செய்வதற்கான திட்ட மதிப்பீடு, அதற்கான அனுபவம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை அளிக்கலாம். மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களை வேலை நாள்களில் அலுவலர்களை அணுகி அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.