தனிநபர் கழிப்பறை திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்க காலதாமதம்
விருதுநகர் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் பணிகள் முடிந்த நிலையிலும் காசோலை வழங்காமல் காலதாமதம் செய்வதாக பயனாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் தனிநபர் கழிப்பறை திட்டத்தில் பணிகள் முடிந்த நிலையிலும் காசோலை வழங்காமல் காலதாமதம் செய்வதாக பயனாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களையும் முழு சுகாதாரமாக்கும் திட்டத்தின் அடிப்படையில் அரசு பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், ஒவ்வொரு கிராமங்களிலும் பெண்கள் சுகாதார வளாகம் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகங்கள் ஆகியவை அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைத்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வளாகம் அமைக்க தலா ரூ.12500 வரையில் முழுமானியமும் வழங்கப்படுகிறது. எனவே இம்மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் நிகழாண்டில் 48 ஆயிரம் கழிப்பறைகள் அமைக்க இலக்கு நிர்ணயித்து மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மும்முரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
Advertisement
தனிநபர் கழிப்பறை தேவைப்படுவோர் ஊராட்சி செயலாளரை அணுகி விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வேலை செய்வதற்கான உத்தரவு வழங்கப்படும். மேலும், குறிப்பிட்ட நாள்களுக்குள் சுவரெழுப்புதல், தாழ்வாரம் மற்றும் மூன்று உறைகுழிகளும் அமைக்க வேண்டும். பணிகள் முடிந்ததும் தனிநபர் கழிப்பறை வளாகம் முன்பு பயனாளியுடன் புகைப்படம் எடுத்து வட்டார ஒருங்கிணைப்பாளர் உதவியுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அங்கு வேலை முடிந்த விவரங்களை கணிப்பொறியில் பதிவு செய்து, அதையடுத்து காசோலைகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்வது என்பது நடைமுறையாகும். தற்போது, பணிகள் முடிந்து 10 மாதங்கள் ஆன நிலையிலும் காசோலைகள் வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாக பயனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பாவாலி ஊராட்சியில் பயனாளி ஒருவர் கூறியதாவது:
தனிநபர் கழிப்பறை அமைக்கும் பணி முடிந்து 7 மாதங்கள் ஆகிறது. பணிகள் முடித்ததற்கான ஆவணங்களையும் ஒன்றிய அலுவலகத்தில் அளித்துள்ளேன். ஆனால், இதுவரையில் வழங்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றார்.
இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு வரையில் பணிகள் முடிந்ததும் பயனாளிக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் காசோலை வழங்கப்படும். தற்போது, பணிகள் முடிந்த பயனாளிகளின் விவரங்களை கணிப்பொறியில் பதிவு செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் ஆன்லைன் மூலம் இ.ஜி.ஜி.முறையில் பயனாளிகள் வங்கி கணக்கில் விடுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அடுத்த வார இறுதிக்குள் பணம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மானியத் தொகை அவரவர் கணக்கில் விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.