முகப்பு
தமிழ்நாடு

இமானுவேல்சேகரன் நினைவு தினம்: குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும்

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் வழித்தடங்களில்  மட்டும் சென்று திரும்ப வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Updated On : 8 செப்டம்பர், 2015 at 7:16 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:09 PM

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் வழித்தடங்களில்  மட்டும் சென்று திரும்ப வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை  குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து பேசியதாவது:

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் வருகிற 11 - ம் தேதி 58 - வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து செல்வர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த வழித்தடங்கள் வழியாக மட்டுமே சென்று திரும்புவது அவசியம் ஆகும்.  காரியாபட்டி - அருப்புக்கோட்டை - விருதுநகர் - சாத்தூர் - ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூர் - சிவகாசி - விருதுநகர் - திருநெல்வேலி - கோவில்பட்டி - தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை -  காந்தி நகர் - ராமலிங்கா மில் - திருச்சுழி - நரிக்குடி - பார்த்திபனூர் வழியாக பரமக்குடி சென்று, பின்னர் அங்கிருந்து பார்த்திபனூர் - நரிக்குடி - திருச்சுழி - ராமலிங்காமில் - காந்திநகர் - அருப்புக்கோட்டை வழியாக திரும்பி வர வேண்டும். இதில், அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் செல்ல வேண்டும். இவ்வழித்தடங்களில் காவல் துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் நத்தம்பட்டி காவல் நிலையம், அல்லம்பட்டி முக்குரோடு, விருதுநகர் முக்குச்சாலை, காரியாபட்டி நகர், ஆவியூர் காவல் நிலையம், ராமலிங்கா மில்ஸ், பந்தல்குடி காவல் நிலையம், சாத்தூர் வெங்கடாஜலபுரம், திருத்தங்கல் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில், ராஜபாளையம் வன்னியம்பட்டி விலக்கு உள்ளிட்ட இடங்களில் காவல் துறையின் சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவும் உள்ளது.

மேலும், வாகனங்களில் ஒலிபெருக்கி, சாதி கட்சி கொடிகள் கட்டிக் கொண்டு  செல்லக் கூடாது. ஆயுதங்கள் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. மூடப்பட்ட வேன், கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். வாகனங்கள் மேலே அமர்ந்து செல்வதற்கு அனுமதியில்லை. அன்றைய நாளில் இம்மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு செல்லும் நபர்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் எழுத்து மூலமாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு வாகன அனுமதி சீட்டுக்கள் வழங்கவும், காவல் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், கோட்டாட்சியர்கள் சுபாந்தினி (அருப்புக்கோட்டை), அமர்குஷ்வாஹா (சிவகாசி), காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.