விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலை பாலத்தில் கற்கள் பெயர்வதால் விபத்து அபாயம்
விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் பாலத்தில் அடிக்கடி சிமெண்ட் தடுப்பு கற்கள் பெயர்ந்து விழுவதால் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலையிருப்பதால், நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் பாலத்தில் அடிக்கடி சிமெண்ட் தடுப்பு கற்கள் பெயர்ந்து விழுவதால் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலையிருப்பதால், நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்-சத்தூர் 4 வழிச்சாலையில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில் ஆர்.ஆர்.நகர் தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு சரக்கு ரயில் செல்வதற்காக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் சரக்கு பேருந்துகள் செல்வதால், ஓரத்தில் உள்ள தடுப்புக் கற்கள் பெயர்ந்து மணலும் சரிந்து விழுந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் நிலையிருக்கிறது. இப்பால ஓரத்தில் தடுப்பு மேடையில் தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையிலும், மாலையில் 5 மணி முதல் 6.30 வரையிலும் அமர்ந்திருப்பார்கள். அதோடு, நடைபயிற்சி செல்கிறவர்களும் ஓய்வு எடுக்கும் பகுதியாகவும் உள்ளது.
இப்பகுதியில் அமர்ந்திருப்பவர்கள் மத்தியில் இப்பாலம் எப்போது இடிந்துவிழுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில், மழைக்காலங்களிலும், சரக்கு வாகனங்கள் செல்லும் போதும் 4 தடவை இடிந்ததோடு, மணலும் சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அப்பகுதியில் உள்ளவர்களிடையே விபத்து அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், நிரந்தமாக கட்டடம் அமைத்து, இடிந்து விழுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Advertisement
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் பாலமுருகன் கூறுகையில், இதோடு 4 தடவை இடிந்துள்ள நிலையில் எதிர்பாரத விதமாக தொழிலாளர்கள் விபத்து அபாயத்திலிருந்து தப்பியுள்ளனர். ஆனாலும், தற்காலிகமாகவே உள்ளே மணல் கொட்டி சிமென்ட் தடுப்பு கற்கள் வைத்து அடுக்கி விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் தண்ணீர் வடிகால் மூலம் இறங்கி சிமெண்ட் தடுப்பு கற்கள் வழியாக தண்ணீர் வழிந்து இடைவெளியை ஏற்படுத்தும் போது இடிந்து விழும் நிலையிருக்கிறது. அதனால், சேதமடைந்த பகுதியில் நிரந்தரமாக கட்டடம் அமைக்கவும், கிழக்கு பகுதியில் அணுகுசாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட இடத்தில் ஏன் அடிக்கடி சிமெண்ட் கற்கள் பெயர்ந்து மணல் சரிகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதையடுத்து, கட்டடம் அமைத்து நிரந்தர தீர்வுகாணப்படவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.