விருதுநகர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வு வருகிற 27-ம் நடைபெற இருக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு 6 மையங்களில் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு 6 மையங்களில் வருகிற 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.
பள்ளிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வகையில் பல்வேறு தேர்வுகளை பள்ளிக் கல்வி துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், சிறப்பிடம் பெறுகிறவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்து ஊக்கப்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஊரக திறனாய்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டிற்கான இத்தேர்வு மேற்குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது.
பள்ளிகளில் 8-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றும், நிகழாண்டில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். இம்மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்காக கடந்த மாதம் வரையில் ஆன்லைன் மூலம் 1916 பேர் வரையில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
Advertisement
இத்தேர்வு அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் எஸ்.எச்.என்.மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ்.இந்து மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.பி.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெற இருக்கிறது.
இத்தேர்வில் வெற்றி பெறும் 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, 9-ம் வகுப்பு தொடங்கி, தொடர்ந்து பிளஸ்2 வரையில் ஆண்டுதோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட இருப்பதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.