தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்: இயந்திர முறையில் நாற்று நடும் பணி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம்
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் இயந்திரம் மூலம் நெற்பயிரிடும் பணியை மேற்கொள்வதற்கு 4900 ஹெக்டேர் வரையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.கனகராஜன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பணியை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு பல்வேறு மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. அதில், நெற்பயிர் நடும் பணியின் போது ஏற்படும் ஆள்கள் பற்றாக்குறையை தவிர்க்கவும், நவீன சாகுபடி உத்திகளை பயன்படுத்தும் வகையிலும் நெற்பயிர் சாகுபடியை இயந்திரம் மூலம் மேற்கொள்ளவே விவசாயிகளுக்கு அரசு மானியம் அளிக்கிறது.
அதன் அடிப்படையில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வரையில் மானியம் அளிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 4900 ஹெக்டேருக்கு வழங்கப்பட இருக்கிறது. எனவே இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்வதால் நெற்பயிரிடும் சாகுபடி செலவு குறைவதுடன், நடவுப்பணியும் துரிதமாக மேற்கொள்ள முடியும்.
Advertisement
மேலும், 10 ஆண்டுகளுக்குள்பட்ட சான்று பெற்ற விதைகளுக்கு விநியோக மானியமாக ரூ.10ம், அதேபோல் உயர் விளைச்சல் தரும் சான்று பெற்ற நெல் விதைகளை உற்பத்தி செய்வதற்கு, உற்பத்தி மானியமாக ரூ.5ம் வழங்கப்படுகிறது. இச்சலுகைகளை பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம் என அவர் தெரிவித்தார்.