விநாயகர் சதுர்த்தி விழா: பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வழிபாடு செய்ய வேண்டும்
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என விழா அமைப்பினருக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என விழா அமைப்பினருக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்க வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வழிபாடு செய்வதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை தண்ணீரில் கரைப்பது என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. அண்மைக்காலமாக பிளாஸ்டர் பாரிசினால் செய்த வண்ணப்பூச்சுகளுடன் கூடிய சிலைகளை வழிபாடு முடிந்த பின் நீர் நிலைகளில் கரைப்பதால் மாசுபடும் சூழ்நிலையிருக்கிறது.
அதனால் களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் ரசாயன கலவையற்ற சிலைகளை மட்டும் வழிபாடு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.
Advertisement
அதேபோல், வீதிகளில் வைத்து வழிபடும் போது பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமலும், பந்தலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களையும் உபயோகப்படுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகள் அமைக்க அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் அனுமதி பெற்று, அனுமதித்த நேரங்களில் மட்டுமே ஒலிக்க செய்ய வேண்டும்.
சிலைகள் வைக்கப்பட்ட பந்தலில் தீயை அணைக்கக் கூடிய மணல், தண்ணீர் தயாராக வைத்திருக்க வேண்டும். அதேபோல், விநாயகர் சிலைகளை கரைக்கும் நேரம் மற்றும் நீர் நிலை குறித்த விவரங்களை காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது மின்கம்பத்தில் தொடாதவாறும், பட்டாசு வெடிக்கவும் கூடாது. எனவே பாதுகாப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என விழா அமைப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன், நேர்முக உதவியாளர்(பொது) நாகஜோதி, வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி, காவல் துறை துணைக்கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் விழாக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.