திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக இ-உண்டியல் முறையை கோயில் நிர்வாகம் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை, அங்குள்ள உண்டியல்களில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் மலைக்கோயிலில் இ - உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் மூலம் பற்று மற்றும் கடன் அட்டைகள் மூலம் பக்தர்கள் தங்களது காணிக்கைகளை எளிதாகச் செலுத்தலாம். இத்திட்டம் வியாழக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.