"கடந்த மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உப்புமாவை விரும்பிச் சாப்பிட்டார்'' என்று அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, உடல் நலன் தேறி சிறப்புப் பிரிவுக்கு கடந்த நவம்பர் 19-ஆம் தேதி மாற்றப்பட்ட பிறகு அவரது சிகிச்சைக்கு சி.வி.ஷீலா, எம்.வி.ரேணுகா, சாமுண்டீஸ்வரி உள்பட 16 செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.
சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உணவை தாமே எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார் ஜெயலலிதா. தமக்குப் பிடித்தமான உப்புமா, பொங்கல், தயிர் சாதம் உள்ளிட்டவற்றை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்.
உணவு சாப்பிட வேண்டிய அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, "இந்த ஸ்பூன் உப்புமாவை நான் ஷீலாவுக்காக (செவிலியர்) சாப்பிடுகிறேன்; இந்த ஸ்பூனை "சாமு'வுக்காக (செவிலியர் சாமுண்டீஸ்வரி) சாப்பிடுகிறேன்...' என தமக்குத் தாமே ஊக்கப்படுத்திக் கொண்டார்.
ஒரு மணி நேரம் தொலைக்காட்சி... சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு, எங்களுடன் (செவிலியர்கள்) சேர்ந்து திரைப்படங்களின் பழைய தமிழ்ப் பாடல்களைக் கேட்பார். தினமும் 1 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தார். "தாம் உடல் நலம் பெற லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்வதை தொலைக்காட்சியில் பார்த்து ஜெயலலிதா நெகிழ்ந்தார்'' என்றார் செவிலியர் ரேணுகா.
ஃபிஸியோதெரப்பி சிகிச்சைக்காக... ஃபிஸியோதெரப்பி சிகிச்சையின் ஒரு பகுதியாக எங்களுடன் (செவிலியர்கள்) பந்து எறிந்து விளையாடுவதிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டார் ஜெயலலிதா. பயிற்சிகள் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்கூட, உடல் நலனுக்காக அதை அவர் செய்ய மறுப்பதில்லை; ஆனால் "சோர்வாக இருக்கிறேன்; பின்னர் பயிற்சியைச் செய்யலாமா' என ஜெயலலிதா கேட்பதுண்டு. தனது அறைக்குள் யார் நுழைந்தாலும் ஜெயலலிதா புன்முறுவல் செய்து "தாங்களுக்கு நான் ஏதாவது உதவ வேண்டுமா' எனக் கேட்பார் என்கிறார் செவிலியர் தலைமைக் கண்காணிப்பாளர்.