வெற்றிலை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் அவற்றிற்கு விலை நிர்ணயம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள வேலாயுதம்பாளையம், குளித்தலை, மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15,000 ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. கற்பூரம், வெள்ளை பச்சைக்கொடி என இருவகையான வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. தற்போது மாவட்டத்தில் வெற்றிலை உற்பத்தி அதிகம் இருந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் வெற்றிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுதொடர்பாக புகளூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலாளர் க.ராமசாமி கூறுகையில்,
மூலிகை பயிராக உள்ள கரூர் மாவட்ட வெற்றிலைக்கு சுதந்திரத்திற்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது நம் நாட்டிற்குள் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக டெல்லி, குஜராத் மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது நல்ல உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில் விலை கிடைப்பதில்லை.
தற்போது நல்ல விளைச்சல் இருந்தும் சுமைக்கு ரூ.3,000 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகளுக்கு உரச்செலவு, ஆட்கள் கூலிக்கு கூட விலை கிட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உற்பத்தி அதிகம் இருக்கும் காலத்திலும், குறைவான காலத்திலும் ஒரே மாதிரியான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிலை விவசாயம் சீராக நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.