முகப்பு
தமிழ்நாடு

யுனெஸ்கோ பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் அகஸ்தியர்மலை!

உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில்,

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது. இந்தப் பட்டியலில் அகஸ்தியர் மலை இணைந்ததின் மூலம் உலகளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தமிழக வனத் துறையினர் தெரிவித்தனர்.
 கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.
 தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி மலைப் பகுதி 2000 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் இணைக்கப்பட்டது. அதேபோல, 2001 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாப் பகுதியும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றது. இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 10 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில், தமிழகம் மூன்று வனப் பகுதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
 அகஸ்தியர்மலை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்மலை தமிழக- கேரள மாநில எல்லைகளையொட்டி 3500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அகஸ்தியர் மலை வனப் பகுதியில் 2,250 தாவர வகைகளும், 337 பறவை இனங்களும், 79 பாலூட்டிகளும், 88 வகையான ஊர்வனங்களும், 46 வகை மீன்களும், 45 நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய சிறிய உயிரினங்களும் உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
 அகஸ்தியர் மலையின் பாதுகாப்பட்ட வனத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டு நாய், சாம்பார் (மான்), நான்கு கொம்பு மான்கள், காட்டெருமை, வரையாடு, காட்டுப் பன்றி ஆகியவை அதிகளவில் காணப்படுகின்றன. மேலும், இந்தக் காடுகளில்தான் அதிகளவில் இந்திய பெரிய அணில்கள் ஏராளமாக உள்ளன. அகஸ்தியர் மலைப் பகுதிக்கு உள்பட்ட களக்காடு- முண்டன்துறை புலிகள் சரணாலயமும், கன்னியாகுமரி விலங்குகள் சரணலாயமும் இந்தப் பகுதிகளில் உள்ளன.
 மிகப் பழைமையானது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் இமயமலையைவிடப் மிகப் பழைமையானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றை உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ 2012-இல் அறிவித்தது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும்.
 உயிர்ப்பன்மை பாதுகாப்பு: தமிழக அரசு அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அகஸ்தியர் மலை நிலப்பரப்பில் ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மலைக் கிராம மக்களின் பங்கேற்புடன் வனம் பாதுகாக்கப்படும். வனத்தைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கு கடனுதவி அளிக்கப்படும். இது மக்களையும், வனங்களையும் பிரிக்காதவாறு செயல்படுத்தக் கூடிய திட்டமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments