பதுக்கி வைக்க தங்கம் ஏற்றதல்ல; புத்திசாலிகளின் தேர்வு வேறொன்று
கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தங்களது பணத்தை வெள்ளையாக மாற்ற அதிக அளவில் வெள்ளிப் பொருட்களை வாங்கிக் குவிப்பதாக ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம்: கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தங்களது பணத்தை வெள்ளையாக மாற்ற அதிக அளவில் வெள்ளிப் பொருட்களை வாங்கிக் குவிப்பதாக ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தங்கத்தை விட, வெள்ளிக் கட்டிகளை முறைகேடாக வாங்கும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த அன்றே, ஏராளமானோர் தங்கள் கைவசம் இருந்த பணத்தை தங்கமாக மாற்றிக் கொண்டனர்.
அதன்பிறகு தங்கம் வாங்கவும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துவிட்டது. ஆனால், கருப்புப் பணத்தை மாற்ற ஏராளமான வழிகள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டது. இதில், தங்கத்தை வாங்குவதை விட, அதிக எடையில் வெள்ளிப் பொருட்களை வாங்கும் புதிய யோசனை கருப்புப் பணம் வைத்திருப்போருக்கு தற்போது உதித்துள்ளது.
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கருப்புப் பணம் பதுக்கல்காரர்கள், சேலம் வந்து பல லட்சம் ரூபாய்க்கு வெள்ளிக் கட்டிகளை வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், கடந்த சில நாட்களாக தங்கம் விற்பனை சரிந்து, வெள்ளி விலை சூடுபிடித்துள்ளது. எனவே, வெள்ளி விலையிலும் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது.