நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டி
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்றது. தேர்தலில் போட்டியிடாமல் நாராயணசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் 6 மாதங்களுக்குள் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக வரும் நவம்பர் 19-ம் தேதி நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகரை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக அவர் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதன் முதலில் நெல்லித்தோப்பு போட்டியிட்டார் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச்சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜானகிராமனை தோற்கடித்து வெற்றி பெற்றார், அதனைத்தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் முன்னாள் முதல்வர் ஜானகிராமனை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஓம்சக்தி சேகர் 6365 வாக்கு பெற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜான்குமாரிடம் தோல்வியடைந்தார்.
தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமியை எதிர்த்து போட்டியிடவுள்ள ஓம்சக்திசேகர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.