தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் ரூ. 15.45 லட்சம் பறிமுதல்

DIN

தஞ்சாவூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 15.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பண பட்டுவாடாவை தடுப்பதற்காக 12 பறக்கும் படையினர், நிலையான மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொகுதியில் 12 இடங்களில் தாற்காலிக வாகனச் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, வாகனத் தணிக்கை செய்யப்படுகின்றன.
தேர்தல் விதிமுறைப்படி, ரூ. 50,000-க்கும் அதிகமான ரொக்கத்தை அல்லது 10,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்களை எந்தவித ஆவணங்களோ, ஆதாரங்களோ இல்லாமல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தஞ்சாவூர் அருகே வல்லம் புறவழிச் சாலையில் தேர்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். காரை சோதனையிட்டபோது ஒரு பையில் பணம் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த முகமது ஷாஜித் (31) கோவையில் உள்ள தனியார் பிளைவுட் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், நிறுவனத்துக்குத் தேவையான மரங்களை வாங்குவதற்காக தஞ்சாவூருக்கு பணத்துடன் வந்ததாகவும் பறக்கும் படையினரிடம் கூறினார். ஆனால், அந்தப் பணத்துக்கான ஆவணம் முகமது ஷாஜித்திடம் இல்லை.
எனவே, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் எண்ணினர். இதில், ரூ. 15 லட்சத்து 45 ஆயிரத்து 500 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தொகையைக் கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதற்கான ஆவணங்களைக் கொண்டு வந்தால், அவற்றை சரிபார்த்து அந்தத் தொகை திருப்பித் தரப்படும் என பறக்கும் படையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT