சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் 12 மாநகராட்சி வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதில், 3 மாநகராட்சி மேயர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மீண்டும் வாய்ப்புக் கிடைக்காதவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி.
அதே போல, வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்திகாயினி, திண்டுக்கல் மேயர் மருதுராஜ், நெல்லை மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ், ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் ஆகியோருக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
திருச்சி, சேலம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்களுக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி மேயராக இருக்கும் ஜெயா 41வது வார்டிலும், சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் 56வது வார்டிலும், தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் சாவிரித்ரி கோபல் 23வது வார்டிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுகவினரின் முழுமையான பட்டியலை, முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.