புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் டிஜிட்டர் எக்ஸ்ரே உள்பட பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள், சேவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 600-க்கு மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் நலனுக்காக பல்வேறு நவீன வசதிகலை காங்கிரஸ் அரசு ஏற்படுத்த உத்தரவிட்டது. இதன்படி நவீன வசதிகளுடன் கூடிய மின்தூக்கி (லிப்ட்), நவீன மயமாக்கப்பட்ட டிஜிட்டர் எக்ஸ்ரே அறை, மேம்படுத்தப்பட்ட உயிர் வேதியியியல் துறை, இருதய அறுவை சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள தீவிர இருதய அறுவை சிகிச்சை கண்காணிப்பு பிரிவு போன்றவற்றை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திறந்து வைத்தார்.
சுகாதாரத்துறை செயலாளர் பிஆர்.பாபு தலைமை தாங்கினார். இயக்குநர் டாக்டர் கேவி. ராமன் முன்னிலை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.மோகன்குமார், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் கேஜி.ரவி, மக்கள் டர்பு அலுவலர் டாக்டர் எம்.ஆத்மநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.