சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலாவின் படங்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிமுக (அம்மா) அணியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவை இணைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணியினரும் கடந்த திங்கள்கிழமை (ஏப்.24) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், சசிகலா, தினகரன் குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற 2 நிபந்தனைகளை மீண்டும் கூறி, அதை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறினர். இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் அணியின் மதுசூதனனும், அகற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று பழனிசாமி அணியின் திண்டுக்கல் சீனிவாசனும் கூறிக் கொண்டனர். இதனால், இரு அணிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும் நிலை இருந்தது.
இந்நிலையில், இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை இரு அணிகளுக்கிடையேயான சமரச முயற்சிக்கு முதல்படியாக அமையலாம் எனக் கருதப்படுகிறது.
அதிமுகவை இணைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உகந்த சூழல் கனிந்திருக்கிறது என்றார். எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இரு தரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
இரு தரப்பிலும் தொலைபேசி வாயிலாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஓரிரு நாளில் இரண்டு அணியின் பேச்சுவார்த்தைக் குழுவினரும் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர் என்று நேற்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.