நீலகிரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்தி வந்த கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஓம் பகதூர் (50) கடந்த திங்கள்கிழமை (ஏப் 23) படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இவர் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 5 டிஎஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. இதனிடையே காவலாளி கிருஷ்ண பகதூரை கோத்தகிரி காவல் நிலையத்துக்கு வரவழைத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், ஓம் பகதூர், கிருஷ்ண பகதூரின் மாயமான 2 செல்லிடப்பேசிகளைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து 8-ஆம் எண் நுழைவு வாயில் அருகே செல்லிடப்பேசி சிக்னல் கிடைப்பதால், அப்பகுதியில் செல்லிடப்பேசிகளை கொலையாளிகள் வீசியோ, புதைத்தோ சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடும் பணி நடைபெற்று வந்தது.
இப்பணியில் சைபர் கிரைம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த செல்லிடப்பேசிகள் கிடைத்தால் குற்றவாளிகளை அடையாளம் காண்பது எளிதாகிவிடும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலையில், உடன் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர்தான் குற்றவாளி என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
காவலாளி கிருஷ்ண பகதூர், கையுறை அணிந்துகொண்டு கொலை செய்துள்ளார் என்பதும் பிறகு, கையுறையைத் தீயிட்டு எரித்துள்ளார். இதில், கையுறையின் ஒரு விரல் மற்றும் எரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த தடயத்தை வைத்து காவல்துறையினர் ஆய்வுசெய்ததில் கிருஷ்ண பகதூரின் கைரேகையுடன் பொருந்தியது. எனவே, கிருஷ்ண பகதூர்தான் கொலைக் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.