தமிழ்நாடு

ஒக்கி புயல் மீட்பு, நிவாரணம்: கேரள அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்! ராமதாஸ்

DIN

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது? என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு திகழ்கிறது. ஒக்கி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க பினாமி தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும் போது அப்படித் தான் நினைக்கத் தோன்றுகிறது.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது மட்டுமின்றி பொய்யான தகவல்களை வழங்கி வருவதாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் குற்றச்சாற்றுகள் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல. மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது மீனவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாற்றுகள் முழுக்க முழுக்க உண்மை  என்பதை உணர முடிகிறது. ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?  உயிரிழந்த மீனவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களைக் கூட தமிழக அரசு வெளியிட மறுக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காணாமல் போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்ற பகுதிகளில் இருந்து 284 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும், அவற்றில் இருந்த 2384  பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். மீதமுள்ள 79  படகுகளும். அவற்றில் உள்ள 186 மீனவர்களையும், கன்னியாகுமரி  மாவட்டத்திலிருந்து சென்ற 74  மீனவர்களையும்  மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுவரை ஒரே ஒரு மீனவரைக் கூட தமிழக அரசு மீட்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இன்னும் 1013 பேர் கரை திரும்பவில்லை என்று ஆதாரங்களுடன் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்கள் எந்தெந்த பகுதிகளில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களையும் ஜி.பி.எஸ் கருவி மூலம் பெறப்பட்ட தகவல்களுடன் இணைத்து தமிழக அரசிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றின் உதவியுடன் மீனவர்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசும், இந்திய கடலோரக்காவல்படையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு அதிகாரிகளிடம் மீனவர் சங்க பிரதிநிதிகள் புகார் அளித்த போது, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அதை செய்யாமல்,‘‘மீனவர்கள் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று ஜெபியுங்கள்’’ என்று கூறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மீனவர்களை மீட்க வேண்டிய அரசு அதன் கடமையைச் செய்யாமல், மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்படி பிரசங்கம் செய்வதா அரசின் பணி? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

ஒக்கி புயலால் தமிழகம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதோ, அதை விட அதிகமாக கேரள மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு மீட்புப்பணிகள் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. அந்த மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு  நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். ஆனால், தமிழகத்தில் நிவாரணப் பணிகள் ஆமையை விட குறைவாக வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுநரே ஆய்வு செய்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக் கூட படுக்கவில்லை. புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதை விட ஆர்.கே நகர் தொகுதியில் பிரசாரம் செய்வது தான் முக்கியமா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

கேரளத்தில் ஒக்கிப் புயலில் சிக்கி 30 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவியை ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.20 லட்சமாக கேரள அரசு உயர்த்தியுள்ளது.  காயமடைந்த மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சேதமடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகு என ஏராளமான சலுகைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை 36 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறி ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 4 லட்சம் மட்டுமே  இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது? என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளத்துக்கு இணையாக இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT