சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதினார்.
அவர் எழுதிய கடித விவரம்: சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் இந்திய உருக்காலை ஆணையத்தின் முடிவை கைவிட அறிவுரைக்குமாறு தங்களுக்கு (பிரதமருக்கு) ஏப்.26-இல் கடிதம் எழுதியிருந்தேன். இந்த ஆலையைத் தனியார் மயமாக்கும் பணியை விரைந்து மேற்கொள்ளும் வகையில் சட்ட ஆலோசகர், சொத்து மதிப்பீட்டாளர்கள், பரிவர்த்தனை ஆலோசகர் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்த ஜூன் 17-இல் அமைத்துள்ளதுடன், சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகளும் கோரப்பட்டுள்ளதாக அறிந்தேன்.
தரமான எஃகு தயாரிப்பில் உலகம் அளவில் புகழ்வாய்ந்த சேலம் உருக்காலை, தமிழக மக்களின் பெருமைமிகு அடையாளச் சின்னமாகத் திகழ்ந்து வருகிறது.
லாப நிலை: கடந்த 2015-16-ஆம் நிதியாண்டை விடவும், 2016-17-ஆம் நிதியாண்டில் ஆலையின் நிதி மேலாண்மை மேம்பட்டுள்ளதை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மேலும், ஆலையின் விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக ரூ.2005 கோடியை தமிழக அரசு நிதி உதவியாகவும் அளித்துள்ளது. மூலதன மானியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மானியம், மின்சார வரி விலக்கு போன்றவற்றுக்காக நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
கைவிட வேண்டும்: பொதுத்துறை நிறுவனங்களுக்குப் போதுமான உதவியையும், வழிகாட்டுதலையும் அளித்து ஊக்கப்படுத்தினாலே, அவை நல்ல பொருளாதார நிலையை அடைய முடியும் என்பதை அறிவீர்கள்.
அதைப்போல சேலம் உருக்காலையையும் இப்போது நஷ்டத்தில் இயங்குவதில் இருந்து மாற்றியமைப்பதற்கான அணுகுமுறைகளைக் கையாண்டால், இந்த ஆலையையும் லாபத்தில் இயங்கச் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கும் முடிவை இந்திய உருக்காலை ஆணையம் கைவிட அறிவுரைக்க வேண்டும்.