புதுதில்லி: தமிழகத்தில் ஒக்கி புயலால் உண்டான பாதிப்புகளை சீர் செய்யும் பொருட்டு, இடைக்கால நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை ஒக்கி புயல் தாக்கியது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்துடன் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்த மீனவர்கள் பலர் கரை திரும்பவில்லை. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ இறப்பு அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அதனைத் தொடர்ந்து ஒக்கி புயலால் உண்டான பாதிப்புகளை சீர் செய்யும் பொருட்டு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு ரூ.13520 கோடி நிவாரணம் கேட்டு கோரிக்கை வைத்திருந்தது. பின்னர் பாதிப்புகளை பார்வையிட குமரி வந்திருந்த பிரதமர் மோடி, தமிழக அரசுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.280 கோடி முதல்கட்டமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தற்பொழுது இடைக்கால நிவாரண நிதியாக, முதல் கட்டமாக ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பின்னர் வியாழன் முதல் தமிழகத்தினை பார்வையிட உள்ள மத்தியக் குழு மீனவர்களுக்கான பாதிப்பு, விவசாயிகளுக்கான பாதிப்பு, சாலை மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என எல்லாவற்றையும் விரிவாக ஆய்வு செய்யும்.
பின்னர் அக்குழு கொடுக்கும் விசாரிவான அறிக்கையின் அடிப்படையில் தேவையான நிதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.