பட்டாசு ஆலைகளை உடனே திறக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் 850 ஆலைகளில்தான், நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீதம் உற்பத்தியாகிறது. இந்தத் தொழில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதரத்துடன் சம்பந்தப்பட்டதாகும்.
சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபடுதலை முன்னிறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை காரணங்காட்டி, கடந்த 26 -ஆம் தேதி முதல் இந்த பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
பெருநகரங்களில் காற்று மாசுபடுதலுக்கு பிரதான காரணம் விதிகளை மீறி வெளியேற்றப்படும் தொழிற்சாலைகளின் நச்சுப் புகை, கூடுதலான வாகனப் பயன்பாடு, காலாவதியான வாகனங்கள் மூலம் வெளியேற்றப்படும் நச்சுப்புகை மற்றும் குளிர்சாதன வசதிக்கான மின் சாதனங்களிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகள்தான் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஆண்டுக்கு ஒன்று அல்லது இருமுறை விழாக்காலங்களின்போது பயன்படுத்தப்படும் பட்டாசுக்கு மட்டும் தடை விதிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுத்திட முடியும் என்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்தப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதரத்தைப் பாதுகாக்கும் வகையில், மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாகத் திறக்க உத்தரவிட வேண்டும். மேலும், தொழிலாளர்கள் வருவாய் இழந்த காலத்துக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.