தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ம் தேதி கூடுகிறது: பேரவை செயலாளர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 8ம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்க இருப்பதாக பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 8ம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்க இருப்பதாக பேரவை செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.
2018ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் உரையாற்றுவார் என்று செயலாளர் தெரிவித்துள்ளார்.
பன்வாரி லால் புரோஹித் தமிழக ஆளுநராக பொறுப்பேற்ற பின் சட்டப்பேரவையில் முதல் முறையாக உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 8ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கி 3 அல்லது 4 நாட்கள் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில், ஆளுநர் உரை மற்றும் ஆளுநர் உரைக்கு நன் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமே நடைபெறும். அதைத் தவிர்த்து, ஆளுநர் உரை மீது விரிவான விவாதம் நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு தரப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் மற்றும் அடுத்த ஆண்டில் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறும்.
ஆளுநர் உரை மற்றும் விவாதம் மட்டுமே இடம்பெறும் என்பதால், தமிழகத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு அளிக்கப்படும்.
அதே சமயம், ஆர்.கே. நகர் எம்எல்ஏவாக இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்பார். எம்எல்ஏவாக, அவர் வெள்ளிக்கிழமை 1.30 மணிக்கு சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொள்ள உள்ளார். இதனால், இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் எம்எல்ஏவாக பங்கேற்பது ஒரு குறிப்பிட்ட அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.