தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே சாலையில் நடந்து சென்ற தம்பதியர், லாரி மோதி இறந்தனர்.
புதியம்புத்தூரை சேர்ந்தவர் முருகேசன் (56). ஆயத்த ஆடைகள் உற்பத்தியாளர். இவரது மனைவி ஜெயா (51). இருவரும் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு புதன்கிழமை இரவு காரில் புறப்பட்டுச் சென்றனர். தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றான் அருகே சென்றபோது, நள்ளிரவு 11.45 மணிக்கு கார் பழுதானது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு அரசுப் பேருந்தில் மதுரை செல்வதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தம் நோக்கி நடத்து சென்றனராம். அப்போது தூத்துக்குடியிலிருந்து சமயநல்லூர் நோக்கி கோதுமை ஏற்றிச் சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து முருகேசன், ஜெயா இருவர் மீதும் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், தம்பதியர் லாரியில் சிக்கி உடல் நசுங்கி இறந்தனர். லாரி ஓட்டுநர் சதீஷ்குமார், நடத்துநர் மஞ்சுகுமார் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
விளாத்திகுளம் டி.எஸ்.பி. தர்மலிங்கம், காவல் ஆய்வாளர் ராமையா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.