திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்த குழந்தையை மீட்டுத் தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இதனால், திண்டுக்கல் வேடப்பட்டியைச் சேர்ந்த சங்கர், இந்துமதி தம்பதியினரின் 8 மாத பெண் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
கட்டடத் தொழிலாளியான சங்கர், ஓசூரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ரூ.2 லட்சம் கொடுத்து இந்துமதியிடமிருந்து பெண் குழந்தையை குமரன் தம்பதியர் பெற்றுள்ளனர். திண்டுக்கல் வந்த சங்கர் குழந்தை தத்துக் கொடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் மனைவி இந்துமதியுடன் சென்று, குமரனிடம் குழந்தையை கேட்டுள்ளார்.
ஆனால், குழந்தையை கொடுக்க குமரன் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இந்துமதி தற்கொலைக்கு முயன்றாத தெரிகிறது.
அவரை சமாதானம் செய்த சங்கர், திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாகல்நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.