சென்னை: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 6-ஆம் தேதி அன்று பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரது இல்லத்தின் அருகே கூடியிருந்த தஷ்வந்த் என்ற இளைஞன்தான் இந்த கோரச் செயலில் ஈடுபட்டவன். முழுவதும் எரிந்த நிலையில் ஹாசினி உடல் கடந்த 8-ஆம் தேதி அன்று அனகாபுத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்டது. விசாரணை முடிவில் தஷ்வந்த்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்த முதல்வர் பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி தஷ்வந்த் மீது காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தக்க தண்டனை வழங்கப்படும். மேலும் இது போல குற்றம் இனி நிகழாதவாறு தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.