திருப்பூர் மாவட்டம், அவிநாசி, வ.உ.சி. திடலில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் (சட்டப்பேரவைத் தலைவர்) சனிக்கிழமை கல் வீசித் தாக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும், பேரவைத் தலைவருமான பி.தனபால் அலுவலகம் அவிநாசி, வ.உ.சி. திடலில் உள்ளது.
சட்டப்பேரவையில் எழுந்த பரபரப்பையடுத்து, திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கினர். இதில், அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இதையடுத்து, அலுவலகத்துக்கும், பி.தனபால் வீட்டுக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.