ரூ.1,800 கோடியில் 50,000 வீடுகள் கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் ஆகியவற்றை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கட்டி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 59,023 அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
நிகழாண்டு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சென்னை, பிற நகரங்களில் ரூ.1,800 கோடி செலவில் 50,000 குடியிருப்புகள் அதாவது பயனாளிகள் தங்களது இடங்களில் வீடுகள் கட்டும் வகையில் 45,000 வீடுகளுக்கும், 5,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தனி வீடுகள் ஒவ்வொன்றும் 300 சதுர அடி தரைப் பரப்பளவில் பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ள வழிவகை செய்யப்படும். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2,10,000 வீதம் மொத்தம் ரூ.945 கோடி மானியம் வழங்கப்படும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகள் 400 சதுர அடி கட்டடப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை, கழிவறை ஆகியவற்றை கொண்டதாக அமையும்.
இந்த வீடுகள் அனைத்துக்கும் மின் வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படுகிறது என தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.