மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஜெயலலிதாவின் 69 -ஆவது பிறந்தநாளை, தமிழகமெங்கும் எழுச்சியோடு கொண்டாடுமாறு அதிமுகவினருக்கு இ.மதுசூதனன் வேண்டுகோள்விடுத்தார். அதன்படி, ஆர்.கே.நகரில் மதுசூதனன் தலைமையில் நாங்கள் கொண்டாடினோம்.
இதேபோல் தமிழகமெங்கும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட, காவல் துறையின் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தபோது, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை, அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.
ஜெயலலிதாவுக்குத்தான் தமிழக மக்கள் வாக்களித்தனர். அவரால்தான் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பழனிசாமி மறந்துவிட்டார். ஜெயலலிதாவின் புகழை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரசியலில் இருந்தே தமிழக மக்கள் அகற்றிவிடுவார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.