ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அறவழிப் போராட்டம் வெடித்துள்ளது. காந்தி பிறந்த மண் என்ற வாசகத்தை எழுத்தாக மட்டுமே பார்த்து வந்த இளைய சமுதாயம், அதற்கு உண்மையான விளக்கத்தை இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் தமிழர்களின் போராட்டத்துக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உலக நாடு முழுவதிலும் இருந்து குவிந்து வருகிறது.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தினமணி.காம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கருத்துக் கணிப்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து 95% வாசகர்கள் தங்களது வாக்குகளை அளித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழர்களை மத்திய/மாநில அரசுகள் ஏமாற்றுகின்றனவா என்ற கேள்விக்கு, ஆமாம் என்று 81% மக்களும், சட்டச் சிக்கல்தான் காரணம் என்று 15% மக்களும் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
பீட்டா போன்ற அமைப்புகள் தேவையா என்றால், 86% மக்கள் தேவையில்லை என்றும், ஜல்லிக்கட்டு விஷயத்தில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தேவையா என்று கேட்டால் 90% மக்கள் தேவை என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஜல்லிக்கட்டுக்கு திரைத்துறை ஆதரவு தேவையில்லை என்று 68% பேரும், இதனை சர்வதேச அளவிலான பிரச்னையாக முன்னெடுக்க வேண்டும் என்று 72%ம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று 89% பேர் வாக்களித்துள்ளனர்.