சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் ஒன்று கூட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் அப்பகுதியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் சென்னை மெரினாவில் தொடர்ந்தது. லட்சக்கணக்கான இளைஞர்கள், மெரினாவில் ஒன்று திரண்டு 6 நாட்களாக வரலாறு காணாத தொடர் போராட்டத்தை நடத்தினர்.
இதன விளைவாக ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இப்போராட்டத்தின் முடிவில் கடந்த 23-ஆம் தேதி அன்று போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். ஆனால் வன்முறையில் போலீசார் ஈடுபடவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதை மறுத்து வீடியோ ஆதாரங்களை அவர்கள் இன்று வெளியிட்டனர்.
இது தொடர்பாக சென்னை பெருநகர தெற்கு கூடுதல் ஆணையர் சங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுக்காக முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் குறித்த போராட்டக்காரர்களிடம் விளக்கினோம். அவசரச்சட்டம் இயற்றப்பட்டும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. போராட்டத்தில் என்ன நடந்தது என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். போராட்டத்தில் இருந்து கலைந்து சென்ற சிலர் தடியடி நடத்தியதாக தவறான தகவலை பரப்பினர். மாணவர்கள் காவல்துறை சொல்வதை கேட்டு போராட்டத்தை கைவிட விரும்பினார்கள். போராட்டத்தில் இருந்த ஒருசிலர் குடியரசு தினத்தை நடத்தவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இருந்தனர். மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை. போராட்டத்தை ஒருசிலர் கைவிடமால்,மாணவர்கள் சிலரை செல்லவிடமால் தடுத்தது கண்டறியப்பட்டது.போராட்டக்காரர்கள் குழுவை அழைத்துச்சென்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போராட்டத்தை வாபஸ் பெற விடாமல் சிலர் தடுத்தனர்.
காவலர்கள் யாரிடமும் லத்தி கொடுக்கப்படவில்லை. பலப்பிரயோகம் செய்யக்கூடாது என உறுதியாக இருந்தோம். குப்பத்தில் இருந்து வந்த சிலர் கற்கள்,பெட்ரோல் குண்டு வீசியவுடன் தான் பிரச்சனை தொடங்கியது.
மெரினாவில் இளைஞர்கள் நாளை மீண்டும் கூட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் மெரினாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பொழுது போக்கு, சுற்றுலாவுக்காக வருவோருக்கு தடை இல்லை. ஆனால் போராட்டம், பேரணி, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.