திரைப்படத் துறைக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் திரைத் துறை கடுமையாக பாதிக்கப்படும் என இளைய தலைமுறை அனைத்து திரைக்கலைஞர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆந்திரம், கர்நாடகம், புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த திரைப்பட, நடன, நாடக, இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள், தயாரிப்பு நிர்வாகிகள், சிகை அலங்கார கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் விஜய்சிவா தலைமை வகித்தார். பொருளாளர் மித்ரா, அமைப்பு செயலாளர்கள் வெங்கட்ராஜ், செந்தில்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கோகுல் வரவேற்றார்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜய்சிவா கூறியதாவது:
திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது திரைப்படத் தொழிலை கடுமையாக பாதிக்கும். இந்த வரி விதிப்பால் தமிழகம் முழுவதும் 2.50 லட்சம் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக தினக்கூலி அடிப்படையிலான திரைத்துறை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள், மேடைக் கலைஞர்கள், நடன கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் என பலதரப்பினரும் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளதால் அவர்களுக்குத் திரைத்துறையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம்.
நலிவுற்ற, மூத்த திரைப்படக் கலைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் உதவிகள் முழுமையாக சென்றடைவதில்லை. இதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து அவர்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.