முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி திறந்து வைத்தார்.
இந்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற அப்துல் கலாம் சிலைகளில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கலாம் அவர்கள் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டு அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இடம்பெற்றது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். எனவே வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை இடம்பெற்றதும் தவறு என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவ்விடத்தில் திருக்குறள் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்தச் சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குர்ரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் ஞாயிற்றுக்கிழமை வைத்தார். பின்னர் இரண்டு புனித நூல்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு மீண்டும் அந்தச் சிலை பின்புறம் உள்ள அதே கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக கலாமின் அண்ணன் பேரன் சலீம் மீது இந்து மக்கள் கட்சி போலீஸில் புகார் அளித்தது.
இந்நிலையில், அப்துல் காலம் உதவியாளராக இருந்த பொன்ராஜ், ஞாயிற்றுகிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தலைவர்களின் சிலை உருவ வழிபாடுகளை அனுமதிக்காதவர் அப்துல் கலாம். அதுபோல மத அடையாளங்களையும் விரும்பாதவர். அவருக்கு சிலை வைத்திருக்கக் கூடாது. கலாம் பற்றி முழுமையானப் புரிதல் இருந்திருந்தால் அவருக்கு சிலை வைத்திருக்க மாட்டார்கள். அந்தச் சிலையை அகற்றக்கோரி பிரதமர் மற்றும் முதல்வருக்கு கடிதம் எழுதுவேன் என்றார்.