திண்டுக்கல்: அதிமுகவில் கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரனுக்கு முழு உரிமை உள்ளது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் நீதிமன்றக் காவலில் திஹார் திறையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், 37 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சிறையில் இருந்து இரவு 10 மணியளவில் வெளியே வந்த தினகரன், தில்லி விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கினார்.
பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவைத் தவிர வேறு யாரும் தம்மை அதிமுகவில் இருந்து நீக்க முடியாது என்றும் சென்னை திரும்பியதும் தான் மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தில்லியில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இன்று சனிக்கிழமை காலையில் சென்னைக்கு வருவார் என அவரது வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், அதிமுக பொருளாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் கூறுகையில், தினகரனை சந்திக்க மாட்டேன் என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியது அவரது சொந்த கருத்து.
தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கிறேன் என்று சொன்னாரே தவிர, யாரும் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. எனவே, அதிமுகவில் கட்சிப் பணியாற்ற டிடிவி தினகரனுக்கு முழு உரிமை உள்ளது என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.