முகப்பு
தமிழ்நாடு

சேலம் இளைஞர் மர்ம சாவு: பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் மீது புகார்

சேலம் டேனிஷ்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:41 PM
பகிர்:

சேலம்: சேலம் டேனிஷ்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மீது தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை அருகே உள்ள பெரியவடகம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி-முனியம்மாள் தம்பதியின் மகன் சதீஷ்குமார் (19). 9ஆம் வகுப்பு வரை படித்துள்ள சதீஷ்குமார், லாரி கிளீனராக வேலை செய்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சதீஷ்குமார், எதிர்பாராத விதமாக அப் பகுதியில் வசித்து வரும் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனின் கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் மாரியப்பனின் கார் சேதமடைந்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சேதமடைந்த காரை சரிசெய்வதற்கான செலவை சதீஷ்குமாரே ஏற்க வேண்டும் என்று கேட்டு மாரியப்பனும், அவரது நண்பர்களான யுவராஜ், சபரி ஆகியோர் சதீஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சதீஷ்குமார் அவரது வீட்டருகில் உள்ள ரயில் தண்டவாள பாதையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த தீவட்டிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் செளரிராஜன் புகாரின்பேரில், சேலம் ரயில்வே போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சதீஷ்குமார் வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்ற மாரியப்பன், தனது கார் சேதமடைந்ததைச் சரிசெய்து கொடுக்க வேண்டும் என மிரட்டி விட்டு சதீஷ்குமாரின் செல்லிடபேசியையும் பிடுங்கிச் சென்றதாக, அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, மாரியப்பன் மற்றும் அவர்களது நண்பர்களின் மிரட்டலால் சதீஷ்குமார் தற்கொலை செய்திருக்கலாம்.

சதீஷ்குமாரின் சாவுக்கு மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்களே காரணம் என்றும் அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இளைஞரின் மர்ம சாவு தொடர்பாக முதலில் வழக்குப் பதிவு செய்த சேலம் ரயில்வே காவல் துறையினர், சதீஷ்குமாரின் சகோதரரின் புகாரைத் தொடர்ந்து, இந்த வழக்கை தீவட்டிப்பட்டி காவல் துறைக்கு மாற்றம் செய்து உள்ளதாகத் தெரிகிறது.

இந்தநிலையில், தீவட்டிப்பட்டி காவல் துறையினர் சதீஷ்குமாரின் பெற்றோர், உறவினர்களிடம் சமரசம் பேசினர்.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உடலை பெற்றுச் சென்றனர்.

இந்நிலையில், சதீஷ்குமாரின் மர்ம சாவு விவகாரத்தில் அவரது சகோதரி சங்கீதா புகார் மனு கொடுத்துள்ளார். சதீஷ்குமார் சாவுக்கு மாரியப்பன்தான் காரணம் என சதீஷ்குமார் குடும்பத்தாரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்று சதீஷ்குமார் குடிடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →