சென்னை: வரும் 2021- வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மா ஆட்சி தொடரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
பொதுமக்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்னும் பொருட்டு, முதல்வர் இன்று 8 மாவட்டங்களைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர்களது தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எம்.எல்.ஏக்களிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்த அதிமுக ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. 2021 வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். எடப்பாடி பழனிசாமியே முதல்வராகத் தொடர்வார். 2021-க்குப் பிறகு தேர்தலை சந்தித்து வென்று, மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் தொடரும்.
என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். அவர் பேச்சை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதைப் புறக்கணித்து விடுங்கள்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தினகரனை தனிப்பட்ட முறையில் சந்திக்கின்றனர். அதில் அரசியல் ரீதியிலான காரணங்கள் இருக்காது. எனவே, தனிப்பட்ட சந்திப்பை அரசியலாக்கக் கூடாது. தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்திப்பதால் இந்த அரசின் பெரும்பான்மைக்கு எந்த ஆபத்தும் இல்லை.
அதிமுகவில் வழிகாட்டும் குழு ஒன்று உள்ளது. அந்தக் குழுவினர்தான் கட்சியை வழிநடத்துகின்றனர். எனவே கட்சியை வழிநடத்துவது குறித்து எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆட்சியைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறமையாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.