சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரானது ஜூன் 14-ஆம் தேதி துவங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரானது ஜூன் 14-ஆம் தேதி துவங்கும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபை எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்பதை முடிவு செய்யும் அலுவல் ஆய்வுக்க குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சபாநாயகர் தனபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஜூன் 14-ஆம் தேதி துவங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்களனைவரும் கலந்து கொண்டனர். அமைச்சர் வேலுமணி மட்டும் வெளியூரில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுடன் கலந்து பேசி ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 வேலை நாட்களில் அவை கூடும்.
இந்த நாட்களில் துறை ரீதியான மானியக் கோரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறும். இவற்றின் நடுவே ஜி.எஸ்.டி உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.சில வெட்டுத் தீர்மானங்களும் எடுத்துக் கொள்ளப்படும்.இது பற்றிய விபரங்கள் உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும்.
ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு அவை கூடும். தினமும் கேள்வி நேரம் இடம்பெறும்.
இவ்வாறு சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் திறப்பது தொடர்பான கேள்விக்கு, முதல்வர் வேண்டுகோள் வைத்தபடி, பிரதமரிடம் இருந்து தேதி கிடைத்தவுடன் அது பற்றி முடிவு செய்யப்படும் என்று தனபால் தெரிவித்தார். அத்துடன் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் நடைபெறும் நாட்களையும் அவர் அறிவித்தார்.