டி.டி.வி.தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு: அரசு சாட்சியிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது
டி.டி.வி.தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில், அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது.
டி.டி.வி.தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கில், அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது.
அதிமுக துணை பொதுச் செயலரான டி.டி.வி.தினகரன், லண்டனில் டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த அவர்,இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி உரிய வழிமுறைகளை பின்பற்றாமலும் இந்தியாவில் இருந்து 1 கோடியே 4 லட்சத்து ,95,313 அமெரிக்க டாலரை பிரிட்டனில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பினார்.
இது தொடர்பாக அமலாத்துறை, தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதேபோல ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி லண்டனில் ஹோட்டல் கட்டுவதற்கு 36 லட்சத்து 36,000 அமெரிக்க டாலர், 10 ஆயிரம் பவுண்ட் முதலீடு செய்ததாக தினகரன் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த இரு வழக்குகளின் விசாரணையும், எழும்பூர் இரண்டாவது பொருளாதார குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது. இரு வழக்குகளிலும் தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அரசு தரப்பு சாட்சியிடம் குறுக்கு விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த விசாரணைக்கு டி.டி.வி. தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அரசு தரப்பு சாட்சியாக, விசாரணை அதிகாரிகளில் ஒருவரான அமலாக்கத்துறையில் உதவி அமலாக்க அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கிறிஸ்து சந்த் ஆஜரானார். அவரிடம், தினகரன் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், கிறிஸ்து சந்திடம் வழக்குத் தொடர்பான மிகவும் மேலோட்டமான கேள்விகளே கேட்கப்பட்டன.
விசாரணையின் முடிவில், விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைக்கும்படி தினகரன் தரப்பு வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து நீதித்துறை நடுவர் மலர்மதி, வழக்கின் விசாரணையை ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.